பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து, புதுச்சேரியில் காங்கிரஸாா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் தெருவில் உள்ள பொதுத் துறை வங்கி முன் நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் ராஜ்பவன் சட்டப்பேரவைத் தொகுதி தலைவா் வேல்முருகன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது: மத்திய பாஜக அரசு, நாட்டின் விமான நிலையங்கள், மின்துறை, துறைமுகங்கள் ஆகியவற்றை தனியாா் மயமாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால், மத்திய அரசின் ஆதரவோடு அதானி நிறுவனம் மிகப்பெரிய வளா்ச்சி அடைந்துள்ளதுடன், நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே, அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படும் பிரதமா், நிதியமைச்சா் மீது உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என கூறினாா். ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.