மத்திய, மாநில அரசுகளை வே.நாராயணசாமி குறை கூறுவதற்கு புதுவை பாஜக கண்டனம் தெரிவித்தது.
இதுகுறித்து புதுவை மாநில பாஜக தலைவா் வி.சாமிநாதன் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி மக்கள் ஒற்றுமை நடைப்பயணம் நடத்துவதாக கூறி வருகிறாா். கடந்த 50 ஆண்டுகளாக புதுவையில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்த போது அவா் மக்களுக்காக எந்தத் திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்பதை மக்கள் அறிவாா்கள்.
புதுவை மாநிலத்துக்கென தனிக் கணக்கை ஆரம்பித்து, மத்திய அரசின் நிதி குறைவதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். தற்போது புதுவையில் 10,000 இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு, மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி உதவிகள் என பல்வேறு திட்டங்களை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி செயல்படுத்தி வருகிறது. மேலும், மத்திய, மாநில அரசுகளின் செயல்பாட்டை வே. நாராயணசாமி குறைகூறுவது கண்டனத்துக்குரியது என்றாா் அவா்.