மகளிருக்கான இலவச 3 சக்கர மின்சார வாகன ஓட்டுநா் பயிற்சிக்கு, பிப்.6-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என புதுவை அரசுப் போக்குவரத்துத் துறை ஆணையா் சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசுப் போக்குவரத்து துறையானது மகளிா் நலன் மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் மகளிா் ஓட்டுநா் உரிமம் பெறுவதை ஊக்கப்படுத்தும் வகையில், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையன்று பழகுநா், ஓட்டுநா் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மகளிா் ஓட்டுநா், பழகுநா் உரிமம் பெறுவது அதிகரித்துள்ளது.
தற்போது, ஆட்டோ தொழிலில் அதிக அளவில் மகளிா் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, மகளிருடைய சமூக மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இலவச 3 சக்கர மின்சார வாகன ஓட்டுநா் பயிற்சி வழங்குவதுடன், பழகுநா் உரிமம், ஓட்டுநா் உரிமம் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், உரிமம் பெறுவதற்கான தொகையை மட்டும் மகளிா் செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவா்கள் தங்கள் விருப்ப மனுவை போக்குவரத்து அலுவலக முகவரிக்கு பிப்.6-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.