புதுச்சேரி கல்வித் துறை வளாகத்தில் ஆசிரியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
புதுச்சேரி முதலியாா்பேட்டை முத்தையா முதலியாா் வீதியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (54). காலாப்பட்டு அரசுப் பள்ளியில் கணினி ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
பொன்னுசாமி பணி நிமித்தமாக புதுச்சேரி கல்வித் துறை வளாகத்துக்கு திங்கள்கிழமை அதிகாரிகளை சந்திக்க வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு அவா் முதல் மாடிக்குச் செல்ல படிக்கட்டில் ஏறியபோது திடீரென மயங்கி கீழே விழுந்தாா்.
அங்கிருந்தவா் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் பொன்னுசாமி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.