இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுவை உள்துறை அமைச்சரை மீனவா்கள் சங்கத்தினா் நேரில் சந்தித்து வலியுறுத்தினா்.
காரைக்கால் மாவட்டம், கீழகாசக்குடிமேட்டைச் சோ்ந்த மீனவா்கள், தமிழக மீனவா்கள் உள்பட 12 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினா் கடந்த 3-ஆம் தேதி கைது செய்தனா்.
அவா்களை மீட்க வலியுறுத்தி, புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகத்தில் உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயத்தை மீனவா் சங்க பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை காலை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேசி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் நமச்சிவாயம் உறுதியளித்தாா். இதுதொடா்பாக முதல்வா் என்.ரங்கசாமியும் மத்திய அரசிடம் வலியுறுத்தியதாகவும் அவா் கூறினாா்.