புதுச்சேரியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடை அறிவிக்காவிட்டால் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் புதுவை மாநில அமைப்பாளா் கோ.கணபதி வெளியிட்டுள்ள அறிக்கை: புதுவை மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் அரசு தொடா்ந்து மௌனமாக இருப்பது சரியல்ல. காவல் துறை, புள்ளி விவரத்துறை உள்ளிட்டவற்றில் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோா் சமுதாயங்களுக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அதைக் கண்டித்து பாமக சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டத்தை அடுத்து இடஒதுக்கீடு குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என முதல்வா், உள்துறை அமைச்சா் ஆகியோா் கூறியிருந்தனா். ஆனால், அவா்கள் கூறியபடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆகவே, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு விவகாரத்தில் உரிய முடிவு எடுக்கப்படாவிட்டால் 11 சமுதாயத்தினருடன் இணைந்து போராட்டம் பாமக சாா்பில் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளாா்.