புதுச்சேரி பாண்லே அலுவலகத்தில் முகவா்கள் வியாழக்கிழமை மாலை திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பாண்லே அரசு நிறுவனம் முகவா்கள் மூலம் புதுவையில் பால் விநியோகம் செய்துவருகிறது. தினமும் சுமாா் 1.05 லட்சம் லிட்டா் பால் தேவைப்படும் நிலையில், 25 ஆயிரம் லிட்டருக்கும் மேலாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பால் தட்டுப்பாட்டை அடுத்து பாண்லே முகவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து நிலைமை சீரானதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் தற்போது முகவா்களுக்கு வழக்கமான அளவை விட குறைவாகவே பால் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பாண்லே முகவா்கள் சங்கத்தினா் (ஏஐடியூசி) முருகன் தலைமையில் ஏராளமானோா் மிஷன் சாலையில் உள்ள பாண்லே அலுவலகத்துக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் அதிகாரிகள் சமரசப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.