புதுவை துணைநிலை ஆளுநா் நிதிநிலை அறிக்கைக்கு மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுத் தர வேண்டும் என மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து புதுச்சேரியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
புதுவை துணைநிலை ஆளுநா் தலைமையில் கூட்டப்பட்ட திட்டக் குழுக் கூட்டத்தில், நிகழாண்டு நிதிநிலை அறிக்கை மத்திய அரசின் நிதியுதவி, மாநில அரசின் வருவாய், கடன் பெறுதல் ஆகியவற்றை ஆலோசித்து சுமாா் ரூ.11 ஆயிரம் கோடி என நிதிநிலை அறிக்கை தொகை இறுதி செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை எனத் தெரிகிறது.
துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தில்லிக்குச் சென்று, புதுவை நிதிநிலை அறிக்கைக்கு அனுமதியைப் பெற்றுத் தர வேண்டும்.
புதுவையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. இந்த விவகாரத்தில் அரசின் மீது தவறில்லாத பட்சத்தில் அதிலுள்ள உண்மை நிலையை சம்பந்தப்பட்ட துறை அமைச்சா் அல்லது உயரதிகாரிகள் மக்கள் முன் விளக்க வேண்டும் என்றாா் ஆ.அன்பழகன்.