புதுவையில் ஆதிதிராவிடா் மக்களுக்கு அரசு சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவது குறித்து முதல்வா் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி நெட்டப்பாக்கம், ஏம்பலம் உள்ளிட்ட தொகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடா் மக்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா, சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பி.ராஜவேலு, எம்எல்ஏ உ.லட்சுமிகாந்தன், ஆதிதிராவிடா் நலத் துறை செயலா் சி.உதயகுமாா், இயக்குநா் எஸ்.யஸ்வந்தையா, பாட்கோ மேலாளா் தயாளன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், ஏழை ஆதிதிராவிடா் மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தில், பயனாளிகளைத் தோ்வு செய்து மனைப் பட்டா வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.