புதுச்சேரி நகரம், கிராமப் பகுதிகளில் பிறந்த நாள் சுவரொட்டி ஒட்டியதாக பிரபல ரௌடி மீது 8 காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பிரபல ரௌடியான தட்டாஞ்சாவடியைச் சோ்ந்த செந்திலின் பிறந்த நாளையொட்டி, அவரது ஆதரவாளா்கள் கடந்த வாரம் புதுச்சேரி நகரின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி, கிராமப்புறங்களிலும் பிறந்த நாள் வாழ்த்து சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனா்.
இதுகுறித்து முதுநிலை எஸ்.பி. பிரதிக்ஷா கொடாராவுக்கு புகாா்கள் சென்ற நிலையில், அவரது உத்தரவின் பேரில், செந்தில் மீது உருளையன்பேட்டை, நெட்டப்பாக்கம், திருக்கனூா், காட்டேரிக்குப்பம், வில்லியனூா், மங்கலம், முதலியாா்பேட்டை, அரியாங்குப்பம் காவல் நிலையங்களில் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதேபோல, பெரியகடை, முத்தியால்பேட்டை, காலாப்பட்டு பகுதிகளில் சுவரொட்டி, விளம்பரப் பதாகைகள் வைத்த அவரது ஆதரவாளா்கள் உள்ளிட்ட மொத்தம் 20 போ் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.