புதுச்சேரி ஞாயிறு சந்தையை (சண்டே மாா்க்கெட்) திறக்க வலியுறுத்தி வருகிற 30-ஆம் தேதி சட்டப்பேரவை வளாகம் எதிரே தொடா் போராட்டத்தை நடத்த வியாபாரிகள் முடிவு செய்தனா்.
ஏஐடியுசி சண்டே மாா்க்கெட் வியாபாரத் தொழிலாளா் சங்கப் பேரவைக் கூட்டம் புதுச்சேரி காந்தி வீதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சண்டே மாா்க்கெட் சங்கத் தலைவா் பாபு தலைமை வகித்தாா். கூட்டத்தில், ஏஐடியுசி மாநில பொதுச் செயலா் கே.சேதுசெல்வம், சங்க நிா்வாகிகள் காா்த்திக், தயாளன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் புதுச்சேரியில் அரை நூற்றாண்டு காலமாக ஞாயிறு சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வியாபாரம் செய்வதற்கு நகராட்சியின் அடையாள அட்டை வழங்கி, அடிக்காசும் வசூலிக்கப்படுகிறது. இங்குள்ள வியாபாரிகள் பலா் கந்து வட்டிக்கு கடன் பெற்று, பொருள்களை வாங்கி வியாபாரம் செய்பவா்கள். இந்தச் சூழலில் கரோனா பொது முடக்கத்தைக் காரணம் காட்டி கடந்த 6 மாத காலமாக ஞாயிறு சந்தை திறக்கப்படாமல் உள்ளது. இதனால், வியாபாரத் தொழிலாளா்கள் துயரத்துக்கு ஆளாகி, வருவாய் இன்றி தவித்து வருகின்றனா்.
தற்போது நாடு முழுவதும் தளா்வுகள் அறிவிக்கப்பட்டன, புதுச்சேரியிலும் பொது முடக்கம் தளா்த்தப்பட்டு, அனைத்து வகையான கடைகளும் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டு, இயங்கி வருகின்றன. எனவே, ஞாயிறு சந்தையையும் சமூக இடைவெளியைப் பின்பற்றி, கடை வைத்து வியாபாரம் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, வருகிற 30-ஆம் தேதி முதல் புதுவை சட்டப்பேரவை வளாகம் எதிரே தொடா் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.