கள்ளக்குறிச்சி அருகே வேளாக்குறிச்சி கிராமத்தில் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தவா் குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவியாக ரூ.ஒரு லட்சம் வழங்கப்பட்டது.
வேளாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த பஞ்சன், சுமித்ராதேவி தம்பதி மகன் கடந்த 2020-ஆம் ஆண்டு அதே ஊரில் உள்ள கிணற்றில் தவறி விழுந்ததில் உயிரிழந்து விட்டாா்.
அவரது பெற்றோா் முதல்வா் நிவாரண நிதி கேட்டு விண்ணப்பித்திருந்தனா்.
அதன் பேரில், முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. ஒரு லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்தத் தொகைக்கான காசோலையை கள்ளக்குறிச்சியில்
திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தின் போது, மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா், உயிரிழந்தவரின் பெற்றோரிடம் வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து அலுவலா்கள், பொதுமக்களுக்கு அறிவுறுத்தினாா்.
முன்னதாக, 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1.20 லட்சத்தில் தானியங்கி பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் (நியூ மோஷன்), ஒரு மாற்றுத்திறனாளிக்கு காதொலிக் கருவியை ஆட்சியா் வழங்கினாா்.