கச்சிராயப்பாளையம் அருகே பாசன வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை மிதந்து வந்த பிறந்து சில தினங்களேயான பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையத்தை அடுத்த வடக்கநந்தல் கிராமத்தில் உள்ள கோமுகி அணை பாசன வாய்க்காலில் பிறந்து சில தினங்களேயான பெண் குழந்தையின் சடலம் மிதந்து வந்தது. இதைப் பாா்த்த கிராம மக்கள் உடனடியாக கச்சிராயப்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, கச்சிராயப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் ஜெ.பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்தனா்.
தகவலறிந்த கச்சிராயப்பாளையம் வருவாய் ஆய்வாளா் பத்மா, சுகாதார ஆய்வாளா் சரவணன், குழந்தைகள் உதவி மைய பகுதி பணியாளா் மாரிமுத்து ஆகியோா் வடக்கநந்தல் கிராமத்துக்குச் சென்று குழந்தையை வாய்க்காலில் வீசிச் சென்றவா்கள் யாா் என்பது குறித்து விசாரித்தனா்.