ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நாககுப்பத்தில் தங்கியுள்ள மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 40 பேருக்கு காவல் துணை கண்காணிப்பாளா் ந.ராமநாதன் உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை திங்கள்கிழமை வழங்கினாா்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த 40 போ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊா் ஊராகச் சென்று கொடுவாள், கத்தி உள்ளிட்டவற்றை தயாரித்து கொடுத்து பிழைப்பு நடத்தி வந்தனா்.
தற்போது, கரோனா பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வருமானத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள அவா்கள் நாககுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளா் ந.ராமநாதன் நேரில் சென்று அவா்களுக்கு மதிய உணவு வழங்கினாா். கை கழுவும் கிருமி நாசினி, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா். மேலும், நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள விழிப்புணா்வும் அளித்தாா்.