கடலூா் மாவட்டத்தில் சூறைக்காற்றால் வாழைகள் சேதமடைந்துள்ளது குறித்து அலுவலா்களுடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. இந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை மாலை பலத்த காற்று , இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. கடலூா் ஒன்றியத்துக்குள்பட்ட ராமாபுரம், கீரப்பாளையம், ஒதியடிக்குப்பம், வெள்ளக்கரை, அரசடிக்குப்பம், வழிசோதனைப்பாளையம், அன்னவல்லி, வழுதலம்பட்டு, புலியூா் மேற்கு, புலியூா் கிழக்கு, கோரணப்பட்டு, மதனகோபாலபுரம், கட்டியங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் சூறைக்காற்று வீசியதால், அங்கு சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கா் வாழைகள் முறிந்து சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வெள்ளக்கரை, கீரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று சேதமடைந்த வாழைத் தோட்டங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சூறைக்காற்றால் சுமாா் 1,800 ஏக்கா் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைகள் சேதமடைந்துள்ளன. இது, விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை உருவாக்கியுள்ளது. இதனால், 1,109 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தோட்டக்கலை, வருவாய்த் துறை அலுவலா்களுடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ், காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.