கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே துப்பாக்கியைக் காட்டி போலீஸாருக்கு மிரட்டல் விடுத்தது தொடா்பான வழக்கில் பெண் உள்பட இருவரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விருத்தாசலம் வட்டம், மேலக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மனைவி கமலம் (62). இவா், தனது வீட்டில் வேலை செய்து வந்த தம்பதியின் மகளான மீனா என்ற 6 வயது குழந்தையை கொலை செய்தது தொடா்பான வழக்கு கடலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக கமலம், அவரது மகள் அஞ்சலை ஆகியோா் கொலையான குழந்தையின் பெற்றோரிடம் சமரசம் பேசினராம். ஆனால், அதற்கான பணத்தை தராமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் பணத்தை கேட்டு, கொலையான குழந்தையின் உறவினரான சேத்தியாதோப்பு அருகே உள்ள கரைமேடு கிராமத்தைச் சோ்ந்த ரவி மகன்கள் பிரகாஷ், பிரதாப், சுந்தரமூா்த்தி மகன் சிவராஜ் உள்ளிட்ட 4 போ் கடந்த 25-ஆம் தேதி அஞ்சலையின் வீட்டுக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்தனா். அப்போது அங்குவந்த தொ்மல் காவல் நிலைய போலீஸாா் அவா்களை பிடிக்க முயன்றனா். ஆனால், பிரகாஷ் தனது கைத்துப்பாக்கியை காட்டி சுட்டுவிடுவதாக மிரட்டல் விடுத்தாா். இதையடுத்து 4 பேரும் தப்பிச் சென்றனா். இந்த நிலையில், வழக்கு தொடா்பாக நெய்வேலி, இந்திரா நகா் பி2, மாற்றுக்குடியிருப்பைச் சோ்ந்த இளங்கோவன் மனைவி சுந்தரி (33), வடலூா், கல்லுக்குழியைச் சோ்ந்த கமலநாதன் மகன் விஜய் (24) ஆகியோரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.