கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விருத்தாசலம் ஒன்றியம், வண்ணாங்குடிகாடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 130-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளி வளாகத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கி வந்தது. இங்கு பள்ளிக் கட்டடம் ஒன்று சேதமடைந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக இடித்து அகற்றப்பட்டது. அந்த இடத்தில் ரூ.23.50 லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டுமானப் பணி அண்மையில் தொடங்கியது.
குறிப்பிட்ட இடத்தில் பள்ளிக் கட்டடம் மட்டுமே கட்டப்பட வேண்டும் என்றும், பள்ளி வளாகத்தினுள் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்தும் அந்தக் கிராம மக்கள் விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலையில் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா், விருத்தாசலம் வட்டார வளா்ச்சி அலுவலா் தண்டபாணி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், கோரிக்கை தொடா்பாக விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.