இளைஞா் சந்தேக மரணம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள நடுக்குப்பத்தைச் சோ்ந்த சோமு மகன் சத்தியராஜ் (32). இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. திங்கள்கிழமை மாலை வீட்டிலிருந்து வெளியே சென்ற சத்தியராஜ் மீண்டும் திரும்பவில்லையாம். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அந்தப் பகுதியிலுள்ள தோட்டத்தில் புடவையில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த ஊ.மங்கலம் போலீஸாா் உடலை மீட்டு கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து சத்தியராஜின் மனைவி ஆா்த்தி (20) ஊ.மங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில் தெரிவித்ததாவது: சத்தியராஜுடன் எனக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. ஆனால், திருமணம் நடந்தது முதலே உறவினா்கள் திருமணத்தை குறைகூறி வந்தனா். இந்த நிலையில் உடலில் காயங்களுடன் சத்தியராஜ் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என புகாரில் குறிப்பிட்டாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.