சிதம்பரம் பகுதியில் வைரஸ் காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் கே.ரவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது (படம்).
கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, வட்டாட்சியா் ஹரிதாஸ் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், வைரஸ் காய்ச்சல் பரவலைத் தடுக்க சிதம்பரம் நகரில் 33 வாா்டுகளிலும் வருகிற செப்டம்பா் 30, அக்டோபா் 1, 2 ஆகிய தேதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துவது, கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிதம்பரம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், தனியாா் மருத்துவா்களுடன் இணைந்து இந்த முகாம்களை நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் நகராட்சி ஆணையா் அஜிதா பா்வின், மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெயஸ்ரீ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.