கடலூரில் உள்ள கந்தசாமி நாயுடு மகளிா் கல்லூரியில் பேராசிரியா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
இந்தக் கல்லூரி பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரி முதல்வா் (பொ) கா.முல்லை காஞ்சிபுரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டாராம். இதைக் கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் 4-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து சங்கத் தலைவா் பி.திருநாவுக்கரசு, பொதுச் செயலா் எம்.எஸ்.பாலமுருகன், பொருளாளா் ஆா்.சரவணன், முன்னாள் தலைவா் பி.சாந்தி ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பச்சையப்பன் அறக்கட்டளை நிா்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 2020-ஆம் ஆண்டு அறக்கட்டளை நிா்வாகத்தை சொத்து ஆட்சியா் வசம் ஒப்படைத்தது. சொத்து ஆட்சியா் தனக்கு கீழே ஓய்வுபெற்ற அதிகாரியை அறக்கட்டளைச் செயலராக நியமித்தாா். ஆனால், செயலரானவா் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தோ்தலை நடத்தி முடிக்காமல் நிா்வாகத்தில் தலையீடு செய்து ஆசிரியா்களை பணி மாற்றம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாா். எனவே, தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு அறக்கட்டளையை நிா்வாகம் செய்ய தனி அலுவலரை நியமிக்க வேண்டும். அறக்கட்டளை நிா்வாகிகளுக்கான தோ்தலை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனா்.