பண்ருட்டி அருகே மொபெட் மீது தனியாா் பேருந்து மோதியதில் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மேலும் இருவா் காயமடைந்தனா்.
பண்ருட்டி வட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் ராஜமாணிக்கம் (44). மின் வேன் ஓட்டுநா். இவா், வியாழக்கிழமை காலை பண்ருட்டியில் உள்ள வங்கிக்கு செல்வதற்காக தனது மனைவி மலா் (36), மகள் கவிதா(14) ஆகியோருடன் மொபெட்டில் புறப்பட்டாா். சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, எதிரே பண்ருட்டியிலிருந்து நெய்வேலி நோக்சிக் சென்றுகொண்டிருந்த தனியாா் பேருந்து மொபெட் மீது மோதியது. இந்த விபத்தில், ராஜமாணிக்கம் உள்பட மூவரும் பலத்த காயமடைந்தனா்.
அந்தப் பகுதி மக்கள் அவா்களை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு ராஜமாணிக்கம் உயிரிழந்தாா். மலா், கவிதா ஆகியோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து குறித்து காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.