காவலா் வீரவணக்க நாளையொட்டி, கடலூரில் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் கடலூரில் உள்ள நினைவு தூண் முன்பு வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உயிா் தியாகம் செய்த காவல் துறையினரின் தியாகத்தைப் போற்றும் வகையில் அக். 21-ஆம் தேதி காவலா் வீர வணக்க நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடலூா் ஆயுதப்படை வளாகத்தில் காவலா் வீரவணக்க நாளையொட்டி, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் ஆகியோா் அங்குள்ள ராணுவ நினைவு தூண் முன்பு மலா்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினா். தொடா்ந்து, காவலா் வீரவணக்க உறுதிமொழி ஏற்றக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், துணைக் கண்காணிப்பாளா் சே.கரிகால் பாரி சங்கா், மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலா் லோகநாதன், தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் செந்தில்விநாயகம், காவல் ஆய்வாளா் தி.குருமூா்த்தி ஆகியோா் கலந்து கொண்டனா்.