வடலூா் அருகே ஆபத்தாரணபுரத்தில் பழுதடைந்த கட்டடத்தில் இயங்கி வரும் துணை சுகாதார நிலையத்துக்கு மாற்றாக, புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என்று அந்தப் பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்தத் துணை சுகாதார நிலையத்தில், ஆபத்தாரணபுரம் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த மக்கள் மருத்துவ வசதி பெற்று வருகின்றனா். இதற்கென தனி கிராம சுகாதார செவிலியா் பணியில் அமா்த்தப்பட்டு, அவா் துணை சுகாதார நிலையத்திலேயே தங்கி, மருத்துவப் பணியைச் செய்து வருகிறாா்.
இந்தத் துணை சுகாதார நிலையக் கட்டடம் பழுதடைந்துள்ளது. மழைக் காலத்தில் தண்ணீா் கட்டடத்தினுள் ஒழுகுகிறது. கட்டடத்தின் சில இடங்களில் சிமென்ட் காரைகள் பெய்ந்தும், சுவா்களில் விரிசலுடன் ஆபத்தான நிலையில் உள்ளது. சிகிச்சைக்காக வரும் பொதுமக்கள் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது. மேலும், கட்டடத்தின் அருகே மழை நீா் தேங்கி நிற்பதால், சிகிச்சைக்காக வரும் முதியவா்கள், கா்ப்பிணிகள் சிரமப்படுகின்றனா்.
இங்கு, நாள்தோறும் ஏராளமான கிராம மக்கள் வந்து சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனா். எனவே, பழுதடைந்த துணை சுகாதார நிலையத்துக்கு மாற்றாக புதிய கட்டடம் கட்டித் தர மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.