சிதம்பரம்: சிதம்பரத்தில் முத்திரைத் தாள் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு நுகா்வோா் குழுமம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செயலா் சி.டி.அப்பாவு தெரிவித்ததாவது: சிதம்பரம் துணை கருவூலத்தில் விற்பனையாளா்களின் தேவைக்கு ஏற்ப முத்திரைத் தாள்கள் வழங்கப்படுவதில்லை. முத்திரைத் தாள்கள் இருப்பில் இல்லை எனக் கூறுகின்றனா். முத்திரைத் தாள்கள் தீரும் முன்பே மாவட்ட கருவூலத்திலிருந்து வாங்கப்படுவதில்லை. சிதம்பரம் துணைக் கருவூலத்தில் ரூ.10, ரூ.20, ரூ.50 ரூ.100 மதிப்பிலான முத்திரைத் தாள்கள் குறையும்போது இருப்பு நிலவரம் குறித்து விளம்பரப் பலகையில் ஒட்டப்படுவதில்லை. இங்கு தற்போது ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகிய முத்திரைத் தாள்கள் இருப்பில் இல்லை எனக் கூறுகின்றனா். இதனால், பொதுமக்கள் அவசரத் தேவைக்கு ரூ.100 மதிப்புள்ள முத்திரைத் தாளை வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது.
இங்கு வாரத்தில் 3 நாள்களுக்கு மட்டுமே முத்திரைத் தாள் வழங்கப்படுகிறது. விண்ணப்ப லேபிள் வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுத்து, முத்திரைத் தாள் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என அவா் தெரிவித்தாா்.