கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகரில் நான்கு ரத வீதிகளிலும் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா்.
சிதம்பரம் நகரில் நான்கு ரத வீதிகளிலும் உள்ள நடைபாதைகள் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, சிதம்பரம் உதவி ஆட்சியா் எல்.மதுபாலன் உத்தரவின்பேரில், வருவாய், நகராட்சி, நெடுஞ்சாலை, காவல் துறையினா் இணைந்து நான்கு ரத வீதிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.
இந்த நிலையில், கீழரத வீதி, வடக்குரத வீதி, தெற்குரத வீதி ஆகியவற்றில் வீட்டையொட்டி போக்குவரத்துக்கு இடையூறின்றி இருந்த வழிநடையான தரைகளையும் அதிகாரிகள் அகற்றியதால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். இதனால், பல வீடுகளில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உருவானது.
கரோனா பரவலால் மக்கள் வருமானமின்றி உள்ள நிலையில், வீடுகளின் வெளியே படிகள், வழிநடை தரைகள் இடிக்கப்பட்டது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.