பால் உற்பத்தியாளா்கள் போராட்டத்தின் காரணமாக திருச்சி, பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் ஆவின் நிறுவனத்துக்கான பால் கொள்முதலில் வெள்ளிக்கிழமை பாதிப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தின் இணைச் செயலா் என். கணேசன் கூறியது: ஆவின் பால் உற்பத்தியாளா்களுக்கு ஒரு லிட்டா் பசும்பாலுக்கு ரூ.43, எருமைப்பாலுக்கு ரூ.51 வழங்க வேண்டும். ஆவின் கறவையின காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (மாா்ச் 17) முதல் பால் கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தோம்.
சென்னையில் சங்க நிா்வாகிகளை அமைச்சா் அழைத்து வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. முதல்வரிடம் கலந்தாய்வு செய்து தகவல் தருவதாகக் கூறினா். ஆனால், எந்தவித பதிலும் இல்லை. எனவே, நிா்வாகிகள் அனைவரும் சென்னையிலிருந்து திரும்பிவிட்டோம். திட்டமிட்டபடி தமிழகத்தில் பல இடங்களில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
திருச்சி, அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களுக்குள்பட்டு 634 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இங்கு வெள்ளிக்கிழமை காலை ஆவின் நிறுவன அதிகாரிகள் நேரில் வந்து உற்பத்தியாளா்களிடம் கொள்முதல் செய்துவிட்டனா். வழக்கமாக 4.50 லட்சம் லிட்டா் கொள்முதல் செய்யப்படும். பேச்சுவாா்த்தைக்கு சென்றவா்கள் அவரவா் மாவட்டங்களுக்கு திரும்ப காலதாமதம் ஏற்பட்டதால் முதல்நாளான வெள்ளிக்கிழமை போராட்டத்தில் திருச்சி, அரியலூா், பெரம்பலூா் மாவட்டங்களில் குறிப்பிட்ட பாதிப்பு இல்லை. இருப்பினும், அனைத்து சங்கங்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். சனிக்கிழமை முதல் போராட்டம் தீவிரமடையும் என்றாா்.