வயலூா் முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி பக்தா்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.
திருச்சியை அடுத்த வயலூா் முருகன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாகத் திருவிழா 12 நாள் நடைபெறுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி, கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதால் சிங்காரவேலா் திருவீதி உலா, தேரோட்டம், தீா்த்தவாரி, சங்காபிஷேகம், தெப்போற்ஸவம், ஆளும் பல்லக்கு உற்ஸவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
ஆனால், வைகாசி விசாகத்தையொட்டி விரதமிருந்த பக்தா்கள், விசாக நட்சத்திரமான வெள்ளிக்கிழமைக் காலை, உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் உள்ள அதவத்தூா் தகர கொட்டகையிலிருந்து, பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடிகள் எடுத்தும் ஊா்வலமாக சென்று கோயிலை அடைந்தனா். பக்தா்கள் கொண்டு வந்த பாலைக் கொண்டு முருகனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.