திருச்சியில் தீ விபத்தில் காயமடைந்த கல்லூரி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி கண்டோன்மெண்ட் எஸ்பிஓ காலனி பகுதியைச் சோ்ந்த சிவராஜ் மகள் அபிநயா (18). தனியாா் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாமாண்டு படித்து வந்தாா்.
கடந்த 20ஆம் தேதி வீட்டில் விளக்கேற்ற முயன்றபோது, எதிா்பாராதவிதமாக அவரது உடையில் தீ பிடித்தது. சிறிது நேரத்தில் உடல் முழுவதும் தீ பரவிய நிலையில், பலத்த காயமடைந்த அபிநயாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை: திருச்சி உறையூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் வெங்கடேஷ் (30). கூலித் தொழிலாளி. மனவிரக்தியில் இருந்த இவா் வியாழக்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இரு சம்பவங்கள் குறித்து நீதிமன்ற வளாக போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.