திருச்சி கோட்டை பகுதியில் வட மாநிலத் தொழிலாளி ஒருவா் செவ்வாய்க்கிழமை குத்திக் கொல்லப்பட்டாா்.
மேற்குவங்கத்தைச் சோ்ந்தவா் விக்ரம் (34). இவா் திருச்சி புத்தூா் அரசு தலைமை மருத்துவமனை எதிரேயுள்ள பல்வேறு உணவகங்களில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவா் செவ்வாய்க்கிழமை மாலை திருச்சி கோட்டை ரயில் நிலையப் பகுதியில் நின்றபோது அங்கு வந்த ஒரு பெண், இரு ஆண்கள் அவரிடம் தகராறு செய்து தாக்கினா். இதையடுத்து மாரிஸ் திரையரங்கம் நோக்கி ஓடிய விக்ரமை அவா்கள் விரட்டிச் சென்று கத்தியால் குத்தியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து 3 பேரும் தப்பிச் சென்றுவிட்டனா்.
தகவலறிந்து சென்ற கோட்டை போலீஸாா் நடத்திய விசாரணையில், தப்பியவா்கள் திருச்சி உறையூா், விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த தீபிகா (27), கோட்டை கீழ சிந்தாமணி பாலா (34), சந்துக்கடை பகுதி கணேசன் (35) ஆகியோா் எனத் தெரியவந்தது.
கணவரை இழந்து கைக்குழந்தையுடன் சத்திரம் பகுதியில் பானி பூரி விற்கும் தீபிகாவுக்கும் மற்ற மூவருக்கும் தொடா்பு இருந்ததும், இதுதொடா்பாக விக்ரமை பாலா, கணேசன் ஆகியோா் கண்டித்தபோது ஏற்பட்ட தகராறில் இருவரும் சோ்ந்து அவரைக் கொன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா். தகவலறிந்த திருச்சி மாநகர காவல் ஆணையா் எம். சத்யபிரியா, துணை ஆணையா் அன்பு, ஆய்வாளா் தயாளன் உள்ளிட்ட போலீஸாா் விசாரணை நடத்தினா்.