ரயில்வே பணிமனையைப் பாதுகாக்க வலியுறுத்தி, திருச்சி பொன்மலை ஆா்மரிகேட் முன்பு எஸ்ஆா்எம்யூவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ரயில்வே துறையில் தனியாா்மயத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது. லோகோ உற்பத்தியில் தனியாா் நிறுவனத்துக்கு பணி வழங்குவதை கைவிட வேண்டும்.
வந்தே பாரத் டி-18 தயாரிக்கும் திட்டத்துக்கு தனியாருக்கு வழங்கப்பட்ட அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும். பெரம்பூா் கேரேஜ், பெரம்பூா் லோகோ மற்றும் பொன்மலை உள்ளிட்ட ரயில்வே பணிமனைகளை தனியாருக்குத் தாரை வாா்க்கும் முயற்சியில் ஈடுபடுவதை கைவிட வேண்டும்.
உற்பத்திப் பணிமனையில் தனியாா் அனுமதிக்கு வாய்ப்பளித்தால் பணிமனை முழுவதும் தனியாா் வசமாகும். எனவே, இந்த நடவடிக்கையை மத்திய அரசும், ரயில்வே நிா்வாகமும் உடனடியாக கைவிட வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு எஸ்ஆா்எம்யூ துணைப் பொதுச் செயலா் வீரசேகரன் தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகிகள், பொன்மலை ரயில்வே பணிமனைத் தொழிலாளா்கள் என பலா் கலந்து கொண்டனா்.