மாணவி மரணத்துக்கு நீதி கேட்டு, தேவேந்திர குல வேளாளா் பேரமைப்பு சாா்பில் திருச்சி ஆட்சியரகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகிலுள்ள நொச்சிவயலைச் சோ்ந்த கல்லூரி மாணவி வித்யாலட்சுமி உயிரிழப்புக்கு காரணமான உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவேண்டும்.
அந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும். குற்றவாளிகளை தப்பவிட்ட காவல்துறை அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தேவேந்திரகுல வேளாளா் பேரமைப்பின் பொதுச் செயலா் வழக்குரைஞா் சங்கா் தலைமை வகித்து பேசினாா்.
பேரமைப்பின் தலைவா் அய்யப்பன் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் பேரமைப்பின் மாநில, மாவட்ட, மாநகர நிா்வாகிகள் திரளாக கலந்து கொண்டனா்.