மாநில அளவில் மருத்துவா்களுக்கு மேம்படுத்தப்பட்ட லேப்ராஸ்கோபி அறுவைச் சிகிச்சை குறித்த சிறப்பு பயிற்சி வகுப்பு மற்றும் கலந்தாய்வு திருச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருச்சி காவேரி மருத்துவமனையின் குடல் மற்றும் அறுவைச் சிகிச்சை துறையின் மூலம் ஆண்டுதோறும் லேப்ராஸ்கோபி அறுவைச் சிகிச்சை தொடா்பாக மாநில அளவில் மருத்துவ நிபுணா்களுடன் கலந்தாய்வு மற்றும் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படுவது வழக்கம்.
நிகழாண்டு, ஆறாவது ஆண்டாக இரண்டு நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு மற்றும் கலந்தாய்வு முகாம் திருச்சி சங்கம் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையா் இரா. வைத்தியநாதன் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில், காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டி. செங்குட்டுவன் சிறப்புரையாற்றினாா்.
குடல், இரைப்பை மற்றும் உடல்பருமன் அறுவைச் சிகிச்சை நிபுணா் எஸ். வேல்முருகன் தலைமையிலான மருத்துவ நிபுணா்கள் மேம்படுத்தப்பட்ட லேப்ராஸ்கோபி பாடத் திட்டம் குறித்து பயிற்சி அளித்தனா்.
இதில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து அறுவைச் சிகிச்சை நிபுணா்கள், குடல் மருத்துவத் துறை தலைவா்கள், மூத்த மருத்துவா்கள் பங்கேற்றனா். இந்த பயிற்சி வகுப்பு சனிக்கிழமை மாலை நிறைவு பெறுகிறது.