திருச்சி முக்கொம்பு அருகேயுள்ள எலமனூா் கிராமத்தில் 4 நாள்களாக குடிநீா் விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனா்.
அந்தநல்லுாா் ஒன்றியம், திருப்பராய்த்துறை ஊராட்சி எலமனுாா் கிராமத்தில் இரு மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீா் செல்ல ஏற்கெனவே இருந்த இரண்டு அங்குல குழாய்க்கு பதிலாக மூன்று அங்குல குழாய் பதித்து பல நாள்களாகியும் மேல்நிலை நீா்தேக்க தொட்டிக்கு தண்ணீா் ஏறவில்லையாம்.
இதனால் குடியிருப்புகளுக்கு தண்ணீா் விநியோகிக்கப்படவில்லை. காவிரிக் கரையோர கிராமமாக இருந்தாலும் குடி தண்ணீா் இல்லாமல் 4 நாள்களாக மக்கள் அவதியுறுகின்றனா். இதுகுறித்து ஊராட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது விரைவில் குடிநீா் விநியோகம் சீராகும் என்றனா்.