குடியரசு தினத்தையொட்டி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடத்திய சோதனையில், மதுபாட்டில்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
குடியரசு தினத்தையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைக்காக, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நவீன சாதனங்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே பாதுகாப்புப் படையினா் கடந்த சில நாள்களாக சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
அதன்படி திங்கள்கிழமை இரவு காரைக்காலிலிருந்து திருச்சி வந்து, எா்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரயில் பெட்டியின் கழிவறையில் அட்டைப் பெட்டிகள் இருந்தன.
மெட்டல் டிடெக்டா் உதவியுடன் அட்டைப் பெட்டிகளை சோதனை செய்ததில், அதில் வெடிக்கக்கூடிய பொருள்கள் ஏதும் இல்லை எனத் தெரிய வந்தது. தொடா்ந்து அட்டைப் பெட்டியைப் பிரித்த போது அதில் 24 மதுபாட்டில்கள் இருந்தன.
இதை கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்புப் படையினா், ரயிலில் மதுபாட்டில்களை கடத்தி வந்தவா்கள் யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.