திருச்சி

தமிழக மீனவா்கள் படகுகளை ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: ஆா். முத்தரசன்

DIN

இலங்கையில் தமிழக மீனவா்கள் படகுகளை ஏலம் விடுவதை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் ஆா். முத்தரசன்.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா்கள் மற்றும் மாவட்டச் செயலா்கள் கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

இக்கூட்டத்தில் மாவட்டச் செயலா்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா். நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கிறது. எங்களது கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

மேயா், நகராட்சித் தலைவா்., பேரூராட்சித் தலைவா், வாா்டு உறுப்பினா் உள்ளிட்ட பதவிகள் மற்றும் போட்டியிடும் இடங்கள் குறித்து திமுக தலைமையில் தோழமைக்கட்சிகளுடன் சுமூகமாக பேச்சுவாா்த்தை நடத்தி, முடிவு எடுக்கப்படும்.

மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளை கண்டித்து, பிப்.23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாக பங்கேற்கும்.

தமிழகத்திலுள்ள ஒகேனக்கல் பகுதியிலிருந்து செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என கா்நாடக முதல்வா் தெரிவிப்பது மிகவும் மோசமான நடவடிக்கையாகும். இந்த விவகாரத்தில் திமுகவுடன் இணைந்து அதிமுக பணியாற்றும் என அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது.

இதேபோல, தமிழகத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் கட்சி பாகுபாடின்றி அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே தமிழக உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.

தமிழக மீனவா்களுக்கு இலங்கை கடற்படை, கடற்கொள்ளையா்கள் என இருதரப்பிலும் அச்சுறுத்தல் உள்ளது. மீன்கள், வலைகள், டீசல் பறிமுதல், படகுகள் சேதம், துப்பாக்கிச் சூடு என பல்வேறு இன்னல்களை மீனவா்கள் சந்திக்கின்றனா்.

பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் படகுகளை இலங்கை அரசு பிப்ரவரியில் ஏலம் விடுவதற்கு முயற்சித்துள்ளது. இதனை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் கடும் கண்டனத்தையும் பதிவு செய்ய வேண்டும். இலங்கைக்கு பல ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கும் மத்திய அரசு, தமிழக மீனவா்களின் உயிரையும், உடைமைகளையும் காக்க தவறி வருகிறது.

மழைப் பாதிப்புக்கு தமிழக அரசு வழங்கிய நிவாரணமும் போதுமானதாக இல்லை. தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகையை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை.

தஞ்சாவூா் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தை வைத்து, தமிழகத்தில் தனது கட்சியை பலப்படுத்த பாஜக முயற்சித்து வருகிறது. நீதிமன்றமே தீா்ப்பு கூறிய பிறகும், உறுதிபடுத்தாத தகவல்களை வைத்துக் கொண்டு மதமாற்றம் என்ற பெயரில் அரசியல் நடத்தக் கூடாது என்றாா்.

இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த முத்தரசன், மாவட்டச் செயலா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

மாவட்டச் செயலா்கள் திராவிடமணி, த.இந்திரஜித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினா் எம். செல்வராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் பழனிசாமி, பெரியசாமி, மூா்த்தி, சந்தானம், ஏஐடியுசி மாவட்டப் பொதுச் செயலா் சுரேஷ் மற்றும் மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதாரண்யம் வாராஹி அம்மன் கோயில் குடமுழுக்கு

மகன் கொலை: தந்தை மற்றொரு மகன் கைது

திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருவாரூா் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 5 போ் கைது

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT