திருச்சி: நாட்டின் 73ஆவது குடியரசு நாள் விழா திருச்சியில் கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி, காவல்துறை அணி வகுப்பு மரியாதையுடன் புதன்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர், தேசியக் கொடியின் மூவர்ணத்தை குறிப்பிடும் வகையில் வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. பின்னர், வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்பட்டோர் நலத் துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத் துறை, பேரூராட்சி, திருச்சி மாநகராட்சி, கூட்டுறவுத்துறை என பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கி, பாராட்டு தெரிவித்தார். மேலும், மாநகரக் காவல்துறை, மாவட்டக் காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த போலீஸாருக்கு தமிழக முதல்வரின் குடியரசு தின காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.
கரோனா தடை அமல் காரணமாக மாணவர், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. மேலும், சுதந்திரப் போராட்ட தியாகிகளை அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று பொன்னாடை அணிவித்து ஆட்சியர் கெளரவித்தார். இந்த விழாவில், மாநகரக் காவல்துறை ஆணையர் கார்த்திகேயன், ஐஜி பாலகிருஷ்ணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் த. பழனிக்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, காந்திமார்கெட் பகுதியில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ஆட்சியர் சு. சிவராசு, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
திருச்சி மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ. முஜிபுர் ரகுமான் கொடியேற்றி வைத்தார். கரோனா களப்பணியில் சிறப்பாக பணிபுரிந்தோருக்கும், துப்புரவுப் பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.