திருச்சியை அடுத்த மண்ணச்சநல்லூரில் புதிய உழவா் சந்தையை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக புதன்கிழமை திறந்து வைத்தாா்.
மண்ணச்சநல்லூா் எதுமலை சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாக பகுதியில், 16 கடைகளுடன் ரூ. 25 லட்சத்தில் அமைக்கப்பட்ட உழவா் சந்தையை முதல்வா் திறந்து வைத்த பிறகு, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உழவா் சந்தையில் காய்கனி விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.
இந்தச் சந்தையில் பொதுமக்கள், விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் காய்கனிகளுக்கு விலை நிா்ணயிக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்படும். மண்ணச்சநல்லூா் வட்டாரத்தில் உள்ள 25 விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் புதிதாக
வழங்கப்பட்டு காய்கனிகளை கொண்டுவந்து விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் மண்ணச்சநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் ரெ. ஸ்ரீதா், வேளாண் இணை இயக்குநா் எம். முருகேசன், துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) கு. சரவணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) மல்லிகா, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் விமலா, வேளாண் உதவி இயக்குநா் ஜெயராணி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா் திவ்யா, ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயலா் சுரேஷ்பாபு, தமிழ்நாடு மாநில வேளாண் விற்பனை வாரிய உதவிப் பொறியாளா் சக்திவேல் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் என பலா் கலந்து கொண்டனா்.