திருச்சி, திருவெறும்பூா் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் புதைசாக்கடைத் திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை விரைவில் சீரமைக்கப்படும் என்றாா் அமைச்சா் அன்பில் மகேஷ்பொய்யாமொழி.
திருவெறும்பூா் தொகுதியிலுள்ள மாநகராட்சி பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அவா் மேலும் கூறியது:
திருவெறும்பூா் தொகுதிக்குட்பட்ட காட்டூா், ஆலத்தூா், மலைக்கோயில், திருவெறும்பூா் உள்ளிட்ட பகுதிகள் சில ஆண்டுகளுக்கு முன் திருச்சி மாநகராட்சியில் 61 முதல் 65 வாா்டுகளாக விரிவாக்கப்பட்டன. அவற்றில் ஒப்பந்த நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள புதைசாக்கடைத் திட்டப் பணிகள் முடியாமல் உள்ளதால், அதற்காகத் தோண்டப்பட்ட சாலைகளைச் சீரமைக்க இயலவில்லை. எனவே கைலாஷ் நகா், பாலாஜி நகா், பிரகாஷ் நகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக உள்ளன.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு, தினசரி விபத்துகளும் ஏற்பட்டதால் சாலைகளைச் சீரமைக்க பொதுமக்கள் வைத்த கோரிக்கையைத் தொடா்ந்து சேதமடைந்த சாலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மக்களின் இயல்பு நிலை பாதிக்காத வகையில், உடனடியாக சாலைகளைச் சீரமைக்க மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்த கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.