திருச்சி கடைவீதிகளில் டிரோன் (ஆளில்லா சிறிய வகை விமானம்) மூலம் கண்காணிப்புப் பணி நடைபெறுகிறது என்றாா் மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன்.
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி திருச்சி தெப்பக்குளம் பகுதியில் தற்காலிக காவல் உதவி மையத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து அங்கிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்த அவா் மேலும் கூறியது:
திருச்சி மாநகரப் பகுதிகளில் மக்கள் அதிகம் கூடுமிடங்களான சின்னக்கடை வீதி, பெரியகடைவீதி, சிங்காரத்தோப்பு தெப்பக்குளம் பகுதிகளில் 127 சிசிடிவி கேமராக்கள், 6 கண்காணிப்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டு 800க்கும் மேற்பட்ட காவலா்கள் பணியில் ஈடுபடுகின்றனா். 100- க்கும் மேற்பட்ட சீருடை அணியாத போலீஸாரும் பணியில் ஈடுபடுகின்றனா்.
கடைவீதிகளுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைபிடித்து, முகக்கவசம் அணிய வேண்டும். திருச்சி மாநகரத்தில் 95 சத காவலா்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். மீதமுள்ள 5 சதம் போ் உடல் நலக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தடுப்பூசி செலுத்தவில்லை.
திருச்சி மாநகரைப் பொருத்தவரை 1051 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் பழுதான 300க்கும் மேற்பட்ட கண்காணிப்புக் கேமராக்கள் சரிசெய்யப்பட்டுள்ளன.
கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் நகைப் பறிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளன. முக்கிய வீதிகளில் தற்காலிக தரைக்கடைகள் அமைக்க அனுமதிப்பது குறித்து ஆட்சியரிடம் ஆலோசனை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் முதன் முறையாக தீபாவளி கூட்ட நெரிசலைக் கண்காணிக்க டிரோன் மூலம் கண்காணிப்புப் பணி செயல்படுத்தப்படுகிறது என்றாா் அவா்.