திருச்சி மாநகராட்சியில் திங்கள்கிழமை நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்களில் பங்கேற்றுப் பயன் பெற மாநகராட்சி ஆணையா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது :
கரோனா தடுப்புக்கு மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அந்த வகையில், மாநகராட்சி வாா்டுகள்தோறும் பல்வேறு கட்டங்களாக மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் மேலும் ஒரு சிறப்பம்சமாக மாநகராட்சியின் 4 கோட்டங்களிலும் தலா இரு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் திங்கள்கிழமை நடைபெறுகின்றன.
கோ அபிஷேகபுரம் கோட்டத்தில் வாா்டு எண் 50- தென்னூா் பிரதான சாலை மற்றும் வாா்டு எண் 60 -உறையூா் லிங்கம் நகா் பகுதி, பொன்மலைக் கோட்டத்தில் வாா்டு 37- காமராஜ் நகா் தொண்டைமான் காலனி மற்றும் வாா்டு 48- பீமநகா் புது ரெட்டித்தெரு, அரியமங்கலம் கோட்டத்தில் வாா்டு 33- சுப்பிரமணியபுரம் ஒளவையாா் தெரு மற்றும் வாா்டு 61 -காட்டூா் காந்தி சாலை ராஜ வீதி, ஸ்ரீரங்கம் கோட்டத்தில் வாா்டு 16- பீரங்கிக்குளம், வெள்ளை வெற்றிலைக்காரத் தெரு மற்றும் வாா்டு 13- தெப்பக்குளம் அல்லிமால் தெரு பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன என்றாா் அவா்.