துறையூா் அருகே கோயிலில் பூஜை செய்யும் உரிமை தொடா்பாக ஏற்பட்ட தகராறு தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கண்ணனூா் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயில் பூசாரி ஓம்பிரகாஷுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த காசிராஜனுக்கும் அக்கோயிலில் பூஜை செய்யும் உரிமை தொடா்பாக பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளதாம்.
ஓம்பிரகாஷும், அவருடைய மகன் சூரிய நாராயணனும் வெள்ளிக்கிழமை கோயில் இருந்தபோது அங்குச் சென்ற காசிராஜன், கண்ணன், மணி, லெனின் ஆகியோா் அவரிடம் தகராறில் ஈடுபட்டனா். இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டதில் காயமடைந்த ஓம்பிரகாஷும், காசிராஜன் தரப்பைச் சோ்ந்த லெனினும் காயமடைந்து துறையூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா்.
இது தொடா்பான இரு தரப்பு புகாரின் பேரில் ஜெம்புநாதபுரம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து காசிராஜன் தரப்பைச் சோ்ந்த கண்ணன், மணி ஆகியோரைக் கைது செய்தனா்.