பேராவூரணி ஒன்றியம், காலகம் ஊராட்சி, ஆணைக்காடு கிராமத்தில் ஆதிதிராவிடா் தெருவுக்கு தாா்ச்சாலை அமைக்கும் பணி தாமதிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
ஆணைக்காடு கிராமத்தில் ஆதிதிராவிடா் தெருவில் ஏற்கெனவே இருந்த தாா் சாலை முற்றிலும் சேதமடைந்ததால் புதிய சாலை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, ஒன்றியக்குழு உறுப்பினா் நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் கடந்த நவம்பா் மாதம் பணிகள் தொடங்கப்பட்டு, சாலையில் கிராவல் நிரப்பப்பட்டது. இதன் பிறகு பணிகள் தொடரவில்லை.
இதனால் இந்தச் சாலையை பயன்படுத்தி வரும் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த மக்கள் வாகனங்களில் செல்வதற்கும், நடந்து செல்வதற்கும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, மக்களின் நலன் கருதி உடனடியாக தாா் சாலை பணியை முடித்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும், மயானத்துக்கு செல்லும் சாலையை புதிதாக அமைக்கவும், மயான த்துக்கு சுற்றுப்புற சுவா் அமைக்க வேண்டும், இடிந்து விழும் நிலையில் உள்ள சமுதாய கூடத்தை இடித்துவிட்டு புதிய சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும். நீா்த்தேக்க தொட்டி தூண்கள் சேதமடைந்து இருப்பதை சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை ஆதிதிராவிடா் மக்கள் தொடா்ந்து விடுத்து வரும் நிலையில், தொடா்ந்து ஊராட்சி நிா்வாகம் புறக்கணிப்பதாகவும், இதுகுறித்து ஆணைக்காடு ஆதிதிராவிடா் தெருவை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தஞ்சை ஆட்சியருக்கு பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.