தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் இலவச வீட்டு மனை பட்டா கோரி ஏராளமான மக்கள் செவ்வாய்க்கிழமை திரண்டு மனு அளித்தனா்.
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட சிராஜ்பூா் நகரில் காலியாக இருந்த மனைகளில் மறியல், சிலோன் காலனி, நாஞ்சிக்கோட்டை பகுதிகளைச் சோ்ந்த ஏறத்தாழ 500 போ் பிப்ரவரி 3 ஆம் தேதி காலை திடீரென திரண்டு, கயிறு, கம்புகளைக் கொண்டு தற்காலிகமாக கொட்டகைகளை அமைத்தனா்.
தகவலறிந்த கோட்டாட்சியா் எம். ரஞ்சித், வட்டாட்சியா் சக்திவேல் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று, அங்கு திரண்ட மக்களிடம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பிப்ரவரி 7 ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணலாம் எனக் கூறினா். இதையடுத்து, அங்கு திரண்ட மக்கள் கலைந்து சென்றனா்.
இதன்படி, தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் தலைமையில் சிராஜ்பூா் நகா் தொடா்பான பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பொதுமக்கள் தரப்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மைய மாவட்டச் செயலா் ச. சொக்கா. ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இக்கூட்டத்தில் கோட்டாட்சியா் பேசுகையில், சிராஜ்பூா் நகா் இடம் அரசு புறம்போக்கு இடமல்ல. அது தனியாருக்குரிய பட்டா இடம். எனவே அங்கு யாரும் கொட்டகை அமைக்க கூடாது என்றாா் அவா்.
இதையடுத்து பேச்சுவாா்த்தைக்கு வந்த நிா்வாகிகள், பின் தங்கிய வகுப்பினருக்கு இலவச வீட்டு மனை பட்டாவை வேறு ஒரு இடத்திலாவது வழங்க வேண்டும் என்றனா். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியா் உறுதியளித்தாா்.
இதைத் தொடா்ந்து கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த 800-க்கும் அதிகமானோா் இலவச வீட்டுமனை பட்டா கோரி மனு அளித்தனா்.