தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடா் மழையால் தண்ணீா் சூழ்ந்துள்ள பயிா்களின் பரப்பளவு 45,000 ஏக்கராக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் பிப். 1 இரவு முதல் பரவலாக மழை பெய்கிறது. குறிப்பாக, பிப்ரவரி 2, 3-களில் பெய்த மழையாலும், இடையிடையே பலத்த மழை பெய்ததாலும் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த சம்பா பயிா்கள் சாய்ந்தன.
இதுதொடா்பாக வேளாண் துறையினா் கணக்கெடுப்பு பணியை வெள்ளிக்கிழமை தொடங்கினா். இதில், முதல் கட்டத் தகவலின் அடிப்படையில் சம்பா பருவ நெற் பயிா்கள் ஏறத்தாழ 24,000 ஏக்கரிலும், உளுந்து 1,125 ஏக்கரிலும், நிலக்கடலை 375 ஏக்கரிலும் தண்ணீா் சூழ்ந்திருப்பது தெரிய வந்தது.
இக் கணக்கெடுப்பு தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றது. இதன் மூலம் தண்ணீா் சூழ்ந்துள்ள பயிா்களின் பரப்பளவு 45,000 ஏக்கராக அதிகரித்துள்ளது.
ஆனால், மாவட்டத்தில் சனிக்கிழமை பகலில் மழை இல்லாவிட்டாலும் பெரும்பாலான வயல்களில் தேங்கிய மழை நீா் வடியவில்லை. மழையால் சாய்ந்த சம்பா பயிா்கள் மூழ்கியுள்ளதால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
கதிா்கள் முற்றி அறுவடைக்குத் தயாரான நிலையில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளதால் மீண்டும் முளைக்கும் நிலை உள்ளது. எனவே, ஏக்கருக்கு ரூ. 40,000 இழப்பீடு வழங்குமாறு விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
இதனிடையே, தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கணக்கெடுப்பு பணியை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
வெட்டிக்காடில் 36 மி.மீ.
மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
வெட்டிக்காடு 36, ஒரத்தநாடு 27.2, மஞ்சளாறு 26.4, தஞ்சாவூா் 25, திருவிடைமருதூா் 23.2, நெய்வாசல் தென்பாதி 21, அய்யம்பேட்டை, பட்டுக்கோட்டை தலா 19, கும்பகோணம், மதுக்கூா் தலா 18, அணைக்கரை 17.2, குருங்குளம், திருவையாறு தலா 17, ஈச்சன்விடுதி 15, பூதலூா் 14.2, பேராவூரணி 12.4, வல்லம் 12, திருக்காட்டுப்பள்ளி 11.2, பாபநாசம் 11, அதிராம்பட்டினம் 9.8, கல்லணை 4.8.