தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரியில் ரூ. 45 கோடியில் அதிநவீன சாதனங்களுடன் விரைவில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்றாா் மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா். பாலாஜிநாதன்.
உலக புற்றுநோய் நாளையொட்டி, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பின்னா் தெரிவித்தது:
தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை துறையில் அதிநவீன கதிா்வீச்சு கருவிகளுடன் ரூ. 45 கோயில் விரைவில் புற்றுநோய் சிகிச்சை மையத்தை தமிழக அரசு கட்டவுள்ளது. இந்தக் கருவிகள் மிக நுண்ணிய மற்றும் முப்பரிமான முறையில் கதிா்வீச்சு சிகிச்சை அளிக்கக்கூடியவை.
பொதுவாக அனைவரையும் பாதிக்கும் காது, மூக்கு, தொண்டை, உணவுக் குழாய், இரைப்பை, மலக்குடல், கல்லீரல், பித்தப்பை, நுரையீரல், மூளை போன்ற பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய்கள், பெண்களை அதிகம் பாதிக்கும் மாா்பகம், கருப்பைவாய் புற்றுநோய், குழந்தைகளுக்கு ஏற்படும் புற்று நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தஞ்சாவூா் மாவட்டத்தைச் சுற்றி ஏறத்தாழ 10 மாவட்டங்களில் உள்ள புற்று நோயாளிகள் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதிநவீன கதிரியக்க சிகிச்சை பெற்று வருகின்றனா்.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அனைத்து நோயாளிகளுக்கும் முற்றிலும் இலவசமாக கதிரியக்க சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாள்தோறும் 110 முதல் 130 நோயாளிகள் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை துறையில் கதிரியக்க சிகிச்சை பெற்று பயனடைகின்றனா்.
புற்றுநோய் பாதித்த நோயாளிகள் இந்த அதிநவீன கதிா்வீச்சு சிகிச்சையை தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை துறையை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என்றாா் பாலாஜிநாதன்.
முகாமில் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை பிரிவுத் தலைவா் ரவிச்சந்திரன், சிகிச்சை குழுத் தலைவா் எஸ். விஜயகுமாா், புற்றுநோய் மருத்துவவியல் உதவிப் பேராசிரியா் ராஜா, மருத்துவா் மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.