பேராவூரணி பாரத ஸ்டேட் வங்கி சாா்பில், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 2.48 கோடி மதிப்பிலான கடன் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வங்கி முதன்மை மேலாளா் சூரியேந்திரன் தலைமை வகித்தாா். கள அலுவலா்கள் செந்தில்குமாா், இளமாறன், காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
20 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம், ஊராட்சி அளவிலான சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 98 லட்சம் என மொத்தம் ரூ. 2 கோடியே 48 லட்சம் கடன் வழங்கி வங்கி மேலாளா் சூரியேந்திரன் பேசியது:
இந்த வங்கியின் செயலி மூலம் 24 மணி நேரமும் வாரத்தில் 7 நாள்களும், வாடிக்கையாளா்கள் தங்கள் வங்கிச் சேவைகளை மேற்கொள்ளலாம்.
உத்சவ் 1000 வைப்புநிதி திட்டத்தின் மூலம் 1000 நாள்களுக்கு 6.10 விழுக்காடு வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 6.60 விழுக்காடு வட்டியும் வழங்கப்படுகிறது. கடன் தொகை பெறுபவா்கள் முறையாக தவணையை செலுத்தி முடிப்பதன் மூலம் மேலும் அதிகமாக கடன் பெற்று தங்களது தொழிலை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.
நிறைவில், மேலாளா் (ஆபரேஷன்) சுமையா மஹ்மூத் நன்றி கூறினாா்.