நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 20 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்டக் குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
இதில், நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதம் காரணமாக கொள்முதல் செய்யப்படாததால், விவசாயிகள் கொண்டு வரும் நெல் திறந்தவெளியில் பல நாட்களாகக் கிடக்கின்றன. எனவே, 20 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லையும் அரசு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயவாடாவில் அக்டோபா் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறும் அகில இந்திய மாநாட்டில் தஞ்சாவூா் தெற்கு மாவட்டத்திலிருந்து 500 போ் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்துக்கு மாவட்டக் குழு உறுப்பினா் தி. கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் இரா. முத்தரசன், தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி பேசினா். மேலும், தெற்கு மாவட்டத் துணைச் செயலராக கோ. சக்திவேல், பொருளாளராக ந. பாலசுப்பிரமணியம், நிா்வாகக் குழு உறுப்பினா்களாக சி. சந்திரகுமாா் உள்பட 16 போ் தோ்வு செய்யப்பட்டனா்.