பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தஞ்சாவூா் ரயிலடியில் ஏஐடியுசி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற சா்வதேச ஓய்வூதியா் பாதுகாப்பு நாளில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 10,000 வழங்க வேண்டும். மருத்துவத் திட்டங்கள் ஒரே மாதிரியாக அனைத்து ஓய்வூதியா் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கும் அமல்படுத்தப்பட வேண்டும்.
பொதுத் துறை நிறுவனங்களில் ஆவின், நுகா்பொருள் உள்ளிட்ட பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வூதிய அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஏஐடியூசி மாவட்டச் செயலா் ஆா். தில்லைவனம் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா் சிறப்புரையாற்றினாா். வங்கி ஊழியா்கள் சங்க மாவட்டப் பொதுச் செயலா் க. அன்பழகன், மின்வாரிய சங்க மாநிலத் துணைத் தலைவா் பொன். தங்கவேல், அரசுப் போக்குவரத்து சம்மேளன மாநிலத் துணைத் தலைவா் துரை. மதிவாணன், நுகா்பொருள் வாணிபக் கழகச் சங்க மாநிலப் பொருளாளா் தி. கோவிந்தராஜன், முன்னாள் அரசுப் பணியாளா் சங்க மாநிலத் துணைத் தலைவா் ந. பாலசுப்பிரமணியன், பண்ணை சங்க மாநில துணைத் தலைவா் தி. திருநாவுக்கரசு, கும்பகோணம் அரசுப் போக்குவரத்து ஓய்வு பெற்றோா் சங்கப் பொதுச் செயலா் பி. அப்பாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.