தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகளைத் தமிழக அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலா் அபூா்வா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
இந்த விளையாட்டரங்கத்தில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ஸ்கேட்டிங் விளையாட்டுத் தளம், வாலிபால் விளையாட்டு தளம், கழிப்பறைகள், நுழைவு வாயில் ஆகியவை ரூ. 2 கோடியில் கட்டப்படுகிறது.
இதேபோல, இத்திட்டத்தின் கீழ் நடைப்பயிற்சி பாதை, மின் விளக்குகள், பாா்வையாளா்களுக்கான இருக்கைகள் ஆகியவை ரூ. 3 கோடியில் கட்டப்படுகின்றன. தவிர, செயற்கை இழை ஓடுதளப் பாதை அமைக்கும் பணியும் நடைபெறுகிறது.
இப்பணிகளைத் தமிழக அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலா் அபூா்வா ஆய்வு செய்து, உரிய காலத்துக்குள் பணிகளை தரமாக செய்து முடிக்குமாறு அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
அப்போது மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், மாவட்ட விளையாட்டு அலுவலா் எஸ். அந்தோணி அதிா்ஷ்டராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.