சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கக் கோரி தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் டிஎன்சிஎஸ்சி சுமை தூக்குவோரின் மாநில பாதுகாப்பு சங்கத்தினா் வியாழக்கிழமை பிற்பகல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், சுமை தூக்கும் தொழிலாளா்களின் பிரச்னைகளை முதுநிலை மண்டல மேலாளா் உடனுக்குடன் தீா்த்து வைக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் தொடங்கப்பட்டு, 50 ஆவது பொன் விழா ஆண்டு கொண்டாடும் வகையில் பணியாளா்கள் மற்றும் சுமை பணி தொழிலாளா்களுக்கும் ஊக்கத்தொகையாக ரூ. 1,500 தமிழக அரசு வழங்கியது. ஆனால், தஞ்சாவூா் மாவட்டத்தில் அக்டோபா் 31 ஆம் தேதி வரை சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு மட்டும் ஊக்கத்தொகை வழங்கவில்லை. இதை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் எம். வீரராகவன் தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் சி. சரவணன், பொருளாளா் கே. பாஸ்கரன், மாவட்டத் தலைவா் ஜி. கலியமூா்த்தி, மாவட்டச் செயலா் ஏ. ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.